
டெஸ்டிமோனாவின் முன்
பிணமாகக் கிடந்தான் இயாகோ,
மன்னித்து விடுங்கள் தலைவியே...
கலகத்தின் விதையைத்தான் அழித்திருக்கிறேன்,
என் கணவனையல்ல..
உன் கணவனையும் கொன்று விடுங்கள்
அவன் காதலை விட
சந்தேகத்தின் கைக் குட்டையைத்தான்
அதிகமதிகம் மோர்ந்து கொண்டிருந்தான்
உங்களின் ஒதெல்லோ என்றோ இறந்து விட்டான்,
மூர் இனத்து முரடனிடம் மலர்ந்திருந்த
ரோஜாத் தோட்டம் கருகிய வாசனையை
நீங்கள் நுகரவில்லையா?
இனியும்
அவனுருவம் ஆதிக்கம் செய்ய அனுமதிக்காதீர்கள்,
அவன் என்றோ இறந்து விட்டான்,
நம்மைப் போல்தான் பியான்காவும்
கேஷியாவிடம் காதலைப் பதியம் போட்டாள்...
பியான்காவின் படுக்கறைக் கசங்கல்கள்
காஷியாவை மட்டுமேன் காயப் படுத்த வில்லை?
அதுதான் காதல்
என் முட்டாள் தலைவியே விழித்துக் கொள்
இனியும் இப்படியொரு கதையெழுத
நமக்கினி ஷேக்ஸ்பியர்கள் தேவையில்லை...
முடிவுகள் எழுதத் தெரியாதவரை
நம் முகவரிகள்
ஆண்களின் காலடியில் கசங்கித்தான் கிடக்கும்,
காத்திருங்கள்...
சற்று நேரத்தில் அந்தச் சந்தேகப் பூனை
மெதுவாக உள்ளே நுழைந்துவிடும்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment