வித்தைக்காரக் கிழவனைச் சுற்றிலும்
ஒரே கூட்டமாக இருந்தது,
சிரிப்பைத் தொலைத்துவிடாமல் பார்த்துக் கொண்டவன்
மற்றவர்களும்
சிரிப்பைத் தொலைத்துவிடாமல் பார்த்துக் கொண்டான்
தண்ணீரை அள்ளியெடுத்து வீசி
பூக்களாகக் கொட்டச் செய்தான்
தனது குல்லாவிலிருந்து பறந்து போன புறாவிற்கு
கைகளை அசைத்தான்
கைக் குட்டையாக அவன் கைகளில் விழுந்தது
கைக் குட்டையை உதறினான்
பொற்காசுகளாய் கீழே இரைந்தது
வாரியெடுத்து எல்லோருக்கும் கொடுத்தான்
சாம்பலாய் உதிர்ந்தது...
கடைசியாகத் தட்டொன்றை எடுத்து
யாசிக்கத் தொடங்கினான்...
நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்
போகும்போது என் காதில் மட்டும் சொன்னான்
இது மட்டும்தான் நிஜம்
அதுவும் என் பசியை நிரப்பும் வரை...
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment