
வளிமக் கலவையின்
கூறுகளைக் குறைத்து
கலந்து உழலும் பசிப்பிணியின்
பெருமூச்சுக்
கலவைத் தனிமங்களை
யார் பிரிக்கக் கூடும் ?
ஆதிக்க வெறியின்
சாதியத் தூண்டல்களில்
செத்து மடியும் மனிதர்களின்
கடவுள்களைக் காட்டுங்கள்...
கும்பிடுப் போட்டு
உயர்த்திய கைகளை
இறக்க மறந்த மனிதர்களுக்கு
அடிக்கவும் கற்றுத் தருவது
எப்போது?
இந்தியா விற்பனைக்கல்ல
விளம்பரத்தில் நடிக்க
நாம் மட்டுமே போதும்,
பறித்த நிலங்களை
மீட்கும் போராட்டம் எப்போது?
பசி ஒரு பாவமென்றும்
சாதியொரு தீட்டென்றும்...
பதுங்கிக் கிடப்பது பாழ்,
விழித்தெழு!
சுட்டெரிக்கும் அந்த நாளில்...
பசியும் ஒரு தீ தான் ...
போராட்டமும் ஒரு வேள்விதான்.
-மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment