
கிழிந்த இதயங்களோடு
அலைந்து கொண்டிருக்கிறோம்,
வழியும் உதிரத் துளிகளின் கதைகளை
யார் யாரோ
எழுதிக் கொண்டிருக்கிறார்கள்,
நடந்து போகும் பிணங்களை
நீங்கள் இங்குதான் பார்க்க முடியும்,
திருடப்பட்ட அடையாளங்களை
பக்குவமாகச் சிதைக்கிறார்கள்,
அவர்களின் கைகளில் தேசியக் கொடியும்
சட்டைகளில் காந்தியின் படமும்...
காந்தியைச் சுட்டத் துப்பாக்கி
இப்போது நிறையத்
துப்பாக்கிகளை ஈன்றிருக்கிறதாம்,
கோட்சேக்கள் தங்களின் பெயர்களை
காந்தியென்றே மாற்றிக் கொண்டார்கள்,
இலக்கென்னவோ இஸ்மாயில்களும்
அப்துல்லாக்களும்தான்,
மனுதர்ம வாசல்கள் திறக்கப்பட்டு
தலித்துகளின்
கைகளில் விலங்கிடப் படுகின்றன,
மாடுகளைத் தெய்வங்களாக்கியவர்கள்
மனிதர்களை
மேய்க்கத் தொடங்கி விட்டார்கள்,
விதைகள் இல்லாமல் போனாலென்ன...
வேர்கள் பெரும் மூச்சு விடுகின்றன...
மற்றுமொரு வனத்தை
மறைமுகமாய்ப் பிரசவிக்க.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment