Saturday, 24 June 2017

சீசரும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவனல்ல

Image may contain: 3 people, people standing

சீசரின் மனைவி 
சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளா ? 
ஆம், அப்படியே 
சீசரும் சந்தேகத்திற்கு உட்பட்டவன்தான் 
என்று எழுதுங்கள் என்ற குரல் கேட்டது... 
திரும்பிப் பார்த்தேன், 
கண்ணீருடன் நின்று கொண்டிருந்தாள் 
அந்த ரோம் நகரத்து கயல்விழியாள், 
பெயரை போம்பியா என அறிமுகம் செய்தாள், 
ஒ..சீசரின் மனைவியா ? 
நான் இறக்கவில்லை, அவலம் என்னை 
இறக்கவிடவில்லை என்றாள்... 
பூப்லியஸ் க்ளோடியஸ் புல்ச்சரை 
உனக்குத் தெரியாதா? என்றேன்.... 
இதே கேள்வியைத்தான் 
சீசரும் என்னிடம் கேட்டான் என்றாள் 
பெண்ணென்றால் உங்களுக்கு 
படுக்கையின் பஞ்சணை விரிப்பா ? 
வேண்டுமென்றால் விரிக்கிறீர்கள் 
வேண்டாமென்றால் தூர எறிந்து விடுகிறீர்கள்..., 
அப்படியென்றால் அவன் ஏன் வந்தான்? 
சீசரே அனுப்பி வைத்தானா? 
குற்றமற்றவன் 
என்னைக் குற்றவாளியாக்கியது எப்படி ? 
கேள்விகளை அடுக்கினாள் 
சீசரின் விசாரணை மன்றம் முழுவதும் 
கிளியோ பாட்ராவின் மயக்கத்திலிருந்தை 
நீங்கள்தானே மறைத்தீர்கள் ... 
பெரிதான குற்றத்தை எடுத்து வீசினாள், 
அப்படியென்றால் நீ நிரபராதியா ? என்றேன் 
அவள் சிரித்தாள், 
அடக்கி வைத்த கண்ணீர் தீரும் மட்டும் சிரித்தாள், 
சீசரும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவனல்ல, 
சீசரைக் கொன்ற மார்கஸ் ப்ரூடஸ், 
சர்விலஸ் காஸ்கா, காசியஸ் லான்ஜினஸ் 
இவர்களுக்கு மட்டுமே உண்மை தெரிந்திருக்கும், 
அவர்களிடமும் கேட்டு பார் என்றவள், 
கண்ணீரைக் கவிதையின் மீது தெளித்துவிட்டு 
சந்தேகமில்லாமல் பறந்து விட்டாள்.

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts