
மெளனத்தின் சப்தங்கள்
மெல்லியதாய்க் கேட்கிறது!
மூன்றாம் சாமத்தின்
மூச்சுக் காற்றுகளின் உரசலில்...
உதடுகளின் எச்சில் முத்தங்கள்
ஊடே ஊடுருவும் வெளியில்...
உறக்கம் தொலைத்த
பசித்தவன் வயிற்றுப் பேச்சில்...
பூனையின் நடையில்
பதுங்கும் எலியின் பயத்தில்...
கடன்பட்டவன் மனதின்
காயம்பட்ட உறக்கத்தில்...
சூஃபியின் மெளனத்தில்
உருளும் திக்ருவின் நகர்வுகளில்...
அசையும் இலைகளின் தொடுதலில்
வீசும் மென் காற்றில்....
கொங்கையில் சூப்பிடும்
குழவியின் நா அசைவில்...
புத்தனின் விழியசைவிற்கும்
நகரும் தூசியின் துகள்களில்...
ஆம்
மெளனம் மெளனமாகவே இல்லை
பேசிக் கொண்டேயிருக்கிறது!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment