
அழகிய இரவின் நறுமணத்தை
நுகர்ந்தீர்களா ?
பசித்திருந்தும் விழித்திருந்தும்
செய்த துவாக்கள்
பூக்களாய் சொறியும் ஓர் இரவு,
திருமறையின் திருப் படிகள்
பூமிக்கு இறங்கி வந்ததால்
லைலத்துல் கத்ர்
விடைபெறும் ரமலானின்
அழகிய புன்னகைக்கும் இரவு,
தர்மத்தை நியாயமாக்கிய மாதம்
மனிதத்தைக் கண் காணிக்கிறது,
புன்னகைக்கக் கற்று கொடுத்த மாதம்
விடைபெறப் புன்னகைக்கிறது...
இந்த இரவை அருந்திக் கொள்ளுங்கள்,
கற்றுக் கொண்ட நேசத்தை
கழற்றி வைக்காதீர்கள்...
தொழுகையும் இபாபத்தையும்
விவாதங்களுக்குள் சுருக்கிக் கொள்ளாதீர்கள்,
அஸ்ஸலாமு அலைக்கும் சொல்லும்
வாய்களில்
அருவெறுப்பான பேச்சுகள் எதற்கு?
நேசம் என்பது
இறைவனை நேசிப்பது மட்டுமல்ல..
சகலரையும் காதலோடு சுவாசிப்பது...,
தழுவிக் கொள்ளுங்கள் இந்தப் புனித இரவை.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment