
கடலைக் குடித்துவிட்டதாக
கர்வப் பட்டக் காகத்திடம்
கடவுளைப் பார்த்தாயா? எனக் கேட்டார்
அந்த மனிதர்,
கடவுளென்றால் யாரெனக் கேட்டது
அந்தக் காகம்...
மானையடித்த புலியிடம் கேட்டதற்கு
மானுக்குத் தெரிந்திருக்கலாம்
என்று சொன்னது புலி,
ஆபரணங்கள் குவித்த
நங்கையிடம் கேட்டதற்கு
கேள்விப் பட்டேன் ஆனால்
பார்த்ததில்லையென்றாள்...
ஐசுவரியங்கள் மீது அமர்ந்திருந்த
ஆடவனிடம் கேட்டார்,
அவரென்ன விலையென்று
சொல்லிவிட்டுப் போங்களென்றான்,
தொழுகையை விட்டுவிடாத
தூயவரிடமும் கேட்டார்...
தேடுகிறேன்...தேடுகிறேன்
இன்னமும் கிடைக்கவில்லை என்றார்
மலமள்ளி தூய்மை செய்யும்
மனிதனிடம் மாண்புடன் கேட்டார்...
பார்த்தேன் என்றான்...
அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்,
பசி மறந்த என் தாயின்
புன்னகையில் என்றான்...
அவர்கள் அவனைப் பார்த்து சிரித்தார்கள்,
கடவுள் அவர்களைப் பார்த்துச் சிரித்தான் .
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment