Thursday, 15 June 2017

நிரந்தர ஆவி



கருவேல மரத்தின் பழங்கள் 
இனிக்கின்றன! 
தருவையைச் சுற்றிய கரைகளில் 
சந்தோசம் சாய்ந்தாடுகிறது! 
குயில்களின் வருகைக்காக 
காகங்களின் கூடுகள் 
திறந்து கிடக்கின்றன! 
குயில்களின் முட்டைகளுக்கு 
பாம்புகள்தான் காவல்! 
குரங்குகள் அடைக் காத்து 
பறவை குஞ்சுகள் பிறக்கின்றன! 
நெல் விதைத்தவன் வயலில் 
தங்கம் விளைவதாக ஒருவன் 
சொல்லிவிட்டுப் போகிறான்! 
நதிகளி லெல்லாம் நன்னீர் 
நளிர்ந்து போகிறது! 
அகழ்ந்துக் கிடைத்த விடத்தில் 
கெயில் யென்றொரு குழாய்! 
புதைந்த யுகத்தில் மனிதர்களை 
மனிதர்களே கொன்றதாய் 
ஆய்வுகள் சொல்கின்றன! 
அணுவின் கூறுகளில் சிதைந்ததாக 
தொல்லியியல் கூறுகிறது! 
இப்படியுமா மனிதர்களென 
எள்ளி நகையாடுகிறது இந்த உலகம்! 
இயற்கையை 
இயற்கையாய்ப் பேணுமிவர்கள் 
என்னை மட்டும் 
அடையாளம் காணாமல்தான் 
நகர்கிறார்கள்! 
அப்படியென்றால்....... 
என் கால யெந்திரத்தை யார்தான் 
பழுது பார்ப்பது? 
இவர்கள் உலகத்தில் இனியும் நான் 
நிரந்தர ஆவிதான்! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts