
வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து
கவிதை யெழுதிக் கொண்டிருக்கிறேன்!
கலைத்துப் போட்டெடுத்து
கதைச் சொல்லிவிட்டுப் போகிறாய்!
எனக்கான சிரிப்புகளை
நான் தானே சிரிக்க முடியும்?
உனக்கானதாக மாற்றிக் கொள்வதில்
எப்படி நியாயம் செய்ய முடியும்?
என் பார்வைகளுக்குள்
உன்னை விதைத்துவிட்டு
என் காட்சிகளையேன்
அறுவடைச் செய்கிறாய் ?
நானென்ற நானை
நீயென்ற நானுக்குள் ஒளித்து விட்டு
என் கனவுகளைத் திருடிப் போகும் நிழலே...
நான் அதற்காகத்தான் அவைகளை
கவிதைகளில் ஒளித்து வைக்கிறேன்!
இனியும் நீ
மௌனங்களை மொழியாகிப் பேசாதே...
ஆசைகளைத் துறந்து அகலக் கூடும்!
இப்படிக்கென்று முடிப்பதில்
எனக்கென்றும் உடன் பாடில்லை...
தொடரும் போட்டுத் தொடர்வோம் வா!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment