
'அவன்' என்றெழுதி
கவிதையைத் தொடங்கி வைத்தேன்...
அதில் வந்து 'அவள்'
அமர்ந்துக் கொள்கிறாள் !
காதல் வார்த்தைகளில்
கவிதை மெல்ல நகர்கிறது...
நிலாவும் பறவைகளும்
தேவையில்லாமல்
வந்து போகின்றன !
தேங்கும் குளத்தில்
சிறு கல்லொன்று விழ...
ராட்சசப் பறவை யொன்று
அவளைத் தூக்கிச் செல்கிறது ...
அவள் உறவுகளாக இருக்குமென
ஒருவன் சொல்லுகின்றான் !
சாதியத்தின் விழுமியம்
உருமாறி வந்திருப்பதாய்
மற்றவன் வந்து
சேர்ந்து கொள்கிறான் !
நாங்கள் மூவருமாய்
அவளைத் தேடிப் போகிறோம்...
பொது ஜன வெளியி லவள்
இரத்த வெள்ளத்தில்
மிதந்துக் கிடக்கிறாள்...
கவிதையைக்
காற்றில் பறக்க விடுகிறேன்
அவள் மேல் வந்து ஒட்டிக் கொண்டு
வெளி வர மறுக்கிறது !
இரத்தக் கறையுடன்
கனவுகளைத் தொலைத்து
அவளும் என் கவிதையும் அந்த அவனும்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment