
கடை வீதியின் கடையிலோர்
கடவுள்களை
விலைக்கு வாங்கப் போனேன்,
விதவிதமாகக் கடவுளர்கள்
வித்தியாசமான விலைகளில்,
சாத்தானும்
விற்பனைக்கிருக்கிறான்,
செய்வினைக் கர்த்தாக்களுக்கு
தேவைப் படுவானாம்,
குபேரனும் சிரிக்கும் புத்தரும்தான்
விலையதிகம்,
செல்வம் கொடுப்பவர்களாம் ,
குபேரன் வட்டிக்குதானே
பணம் கொடுப்பான்...?
வாங்கும் விலைகளில்
எந்தக் கடவுள்களும் காட்சியில் இல்லை,
வசதிதாரர்களுக்கு
மட்டுமே கடவுள் போலும்,
அங்கேயே ஆடித் தொட்டி யொன்றில்
அழகானதாய்ச் சுற்றும் ஒற்றை மீன்
ஒரு லட்சம் ரூபாயாம் !
வசதி தருவதற்காக வாஸ்துவானதாம்,
கடவுள்களை வாங்கினால் போதுமே
ஐசுவரியம் தானாக வராதா?
கடைக்காரன் இளக்காரமாய்ச் சிரிக்கிறான்,
கடவுள்களை வேண்டித் தரிசனம் கண்டு
காரியம் வாங்கும் முன்பு
ஆயுள் காரியம் முடிந்து விடுமாம்....
அப்படியும் இருக்கலாம் ,
கடவுள்களின் சக்திகளும்
இப்போது கடைகளின் விற்பனையில்,
சரி ! திருஷ்டியாவது போகட்டுமென
ஒற்றை ரூபாய்க்கு
கருப்புக் கயிற்றை வாங்கிச் செல்கிறேன்,
விற்பவன் காது பட விமர்சிக்கிறான்...
அல்லது சபிக்கிறான்...
"சாவுக் கிராக்கி காலங்கார்த்தால
வந்து நமக்கென வாய்க்கிதுப் பார்,
தூங்கியெழுந்த மூஞ்சி சரியில்ல "
காலையிலெழுந்தவுடன் அவனும்
கடவுளின் முகத்தில்தானே விழித்திருப்பான் !
-மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment