
நானென்னை
தொலைத்துவிட்டேன் என்று சொன்னால்
நம்பவா போகிறீர்கள்...
நான் யார் என்ற கேள்விகளில்தான்
புதைந்து கிடந்தேன்...
வாழ்க்கை எத்தனைக் கடினமானது ?
இதயத்தின் விரிசலில்
எதை வைத்துப் பூசுவது...
அழுதழுதே உறங்கி விட்டேன்,
என்னை எழுப்பும் அந்தப் பறவைகளினோசை...
இவற்றுக்குத் துன்பங்கள் இல்லையா?
நானும் அவற்றோடு பறக்கிறேன்
என் கைகளில் வளர்ந்த இறக்கைகள்
அழகாய் அசைகின்றன
மேகங்கள் எவ்வளவு அழகாக நகர்கின்றன...
நான் அவற்றுள் மிதக்கிறேன்..
இப்போதுதான் கவனிக்கிறேன்
எவ்வளவு அழகானது இந்தப் பூமி...
இதனையா நாங்கள்
சிதைத்துக் கொண்டிருக்கிறோம்?
பசுமை போர்வையை யார் போர்த்தியது?
என் இதயத்தில் சுவாசம் காதலாகிறது...
காதலைத்தான் நான் சுவாசிக்கிறேன்,
நதிகளின் வளைவுகளை
பறவையின் கண்களால்தான் ரசிக்க வேண்டும்,
இதனையா நாங்கள்
தொலைத்துக் கொண்டிருக்கிறோம் ?
மனிதர்களும் பறவைகளாக இருந்திருந்தால்
தொலையும் ஆசைகளில்
தொலையாமல் இருந்திருப்போமா?
எங்கும் காதலைத்தான் பார்க்கிறேன்,
காற்று என் சிறகுகளைக் காதலிக்கிறது...
இல்லையென்றால் நானெப்படி பறப்பேன்...
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment