
தலையில் விழுந்துவிட்ட இடியை
எடுத்துப் போட்டுவிட்டு
அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்
இதுவும் கடந்து போகும் என்றார்கள்
கோடாரியால் ஒருவன்
தலையை வெட்டிக் கையில் கொடுத்துவிட்டு
இதுவும் கடந்து போகும் என்று சொன்னான்,
மாடொன்று என்னை முட்டித் தள்ளி வீழ்த்தி
இதுவும் கடந்து போகும் என்று சொல்லி
மிதித்துவிட்டுச் சென்றது,
அழுது கொண்டிருந்த கண்களுக்கு
நிழற் கண்ணாடியை மாட்டிவிட்டவன்
உணவுகளை பறித்துக் கொண்டு
திருவோட்டைக் கையில் கொடுத்துவிட்டு
இதுவும் கடந்து போகும் என்று பறந்துவிட்டான் ,
கால் நழுவிக் கொண்டிருந்த நிலம் மட்டும்
நான் உனக்குத் திரும்ப வரமாட்டேன்
என்று சொல்லிவிட்டு கடந்து போனது....
அப்போதுதான் கவனித்தேன்
இறந்தவனருகில்
அழுதுக் கொண்டிருந்தவனைப் பார்த்தும்
அப்படித்தான்
அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்...
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment