எனக்குள்ளிருந்தவனை எழுப்பிவிட்டேன்
சுற்றி வந்துவிட்டு
எதற்காக எழுப்பினாய் எனக் கேட்கிறான்
உன் உணவுத் தட்டுகள் பறிக்கப்பட்டதை
நீ பார்க்கவில்லயாயெனக் கேட்டேன்,
போட்டதைச் சாப்பிட்டு விட்டுப் போ என்கிறான்
உன் நிலம் உனதில்லையென்றேன்
அதனால் எனக்கென்ன கவலையென்றான்
உன் அடையாளம் அழிக்கப் பட்டதென்றேன்
அழியும் உடல்தானே இதுவென்றான்
போராட்டக் குணம் செத்துவிட்டதா என்றேன்
இதற்கு முன் என்ன இருந்ததாயென்றான்
சுரணையற்ற ஜென்மமா நீயென்றேன்
அஃது எனக்கு மட்டுமிருந்து என்ன பயனென்றான்
செத்துத் தொலையேன் என்றேன் கோபமாய்
வரும்போது அது தானாக நடக்குமென்றான்
என்னதான் செய்யப் போகிறாய் எனக் கேட்டேன்
காதலைப் பற்றியோர்க் கவிதையெழுத வேண்டும்
நீ போய்ப் படுத்துத் தூங்கு என்கிறான்...
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment