
வானத்தையே பார்க்கிறோம்
மத்தாப்புகளாய் சிதறுகின்ற வெளிச்சம்
பெரும் சப்த முழக்கத்தில்
அமுங்கிவிட்டது பெரும் அலறல்...
எத்தனை பிஞ்சுகளைக் கருக்கியிருக்குமோ
வல்லமை மிகுத்த குண்டுகள்,
போர் தொடங்கி விட்டதாம்...
விலை நிலங்களுக்குள் வந்து நிற்கின்றன
பீரங்கி வண்டிகள்,
தீவிரவாதத்திற்கு எதிரான
யுத்தமென்று சொல்லிக் கொண்டார்கள்,
எங்களுக்கு என்ன தெரியும்
ஈச்சை நார் குழைத்த மண் வீடுகளையும்
சில ரொட்டித் துண்டுகளையும் தவிர,
பதற்றமான பகுதியென்று முத்திரையிட்டார்கள்
பள்ளிக் கூடங்கள் மூடியே கிடக்கின்றன,
எல்லைப் பகுதிகளில்
எங்களைத்தான் நட்டு வைத்திருக்கிறார்கள்,
எங்களின் புன்னகையை
நாங்கள் எப்படிதான் மீட்கப் போகிறோம் ?
மரத்துப் போன எங்களின் பதற்றத்தின் மீதுதான்
நமது தேசிய கொடியே பறக்கின்றது...
எங்களின் வலிகளையும் சுமந்து கொண்டு...
(எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காக)
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment