
ஷேர்கானின் கிணற்றை
மூடிவிட்டதாக எல்லோரும் சொன்னார்கள்,
அந்தக் கிணற்றிலிருந்துதான்- வசீகரன்
நீரிறைத்துக் கொடுப்பான் ஆடுகளுக்கு,
கிணற்றினருகே ஓர் ஒற்றை மரம்
கையாட்டியழைக்கும் தாலாட்டுப்பாட,
அங்குதான் நீரிறைக்கவந்த யெவனி
அவனை குடத்திலூற்றி சுமந்து சென்றாள்,
அவன் புல்லாங்குழல் காற்று
அங்குதான் காதல் கஸலிசைத்தது,
ஆடுகளை விட்டுவிட்டு அவளோடு போனவன்
அந்திச்சாயலில் ஆடுகளை மட்டுமே ஓட்டிவந்தான்,
இரவை பிடுங்கிக் கொண்டவள்
அவனை அழைக்கிறாள் ஷேர்கானின் கிணற்றிற்கு
அங்குதான் காதலை கயிறாய்திரித்து
கழுத்தில் மாட்டிக் கொண்டாளாம் யெவனி...
கிணற்றை மூடிவிட்டதாகவே சொன்னார்கள்,
ஆனாலும் சில்லென்றக் காற்று மட்டும்
அங்கிருந்துதான் வீசுகிறது வசீகரனுக்கு.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment