மாடுகளெல்லாம் வீதிக்கு வந்துவிட்டதாக
மனிதர்களெல்லாம் பயந்து கிடக்கிறார்கள்,
மனிதர்களின் ஆதார அட்டைகளை
மாடுகள்தான் சரி பார்க்கின்றனவாம்,
இவை மாடுகளாக இருக்கமுடியாதென
போகிறப்போக்கில் ஒருவன் சொல்லிவிட்டுப் போகிறான்,
அவற்றுக்குக் கோரைப் பற்கள் நீண்டிருந்தன,
மனிதர்களை அடித்தும் சாப்பிட்டுக் கொண்டிருந்தன,
மாடுகளிடம் ஆட்சி வந்துவிட்டதாக
பிரகடனம் செய்யப் படுகிறது,
வீதிகள் தோறும் இரத்தக்கவுச்சி வீசிக் கொண்டிருக்க
மாடுகளெல்லாம் புனிதமாக மாறியது,
மாட்டிறைச்சி தடைசெய்வதாகச் சட்டம் வடிவாகிறது,
மாடுகளின் பற்களில் வழியும் உதிரப்பிசிறுகளை
காக்கைகள் கந்தல் பார்த்துக் கொண்டிருக்க,
கோழியிறைச்சி உண்டவனை
சில மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
சில மனிதர்கள் மட்டும்
கசாய்கத்தியை தீட்டிக் கொண்டிருந்தார்கள்...
தெய்வகுத்தம் நீங்க
மாடுகளைப் பலி கொடுத்துத்தான் ஆகவேண்டுமாம்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment