Monday, 29 May 2017

அவர்களுக்கு எப்படித் தெரியும் ?

Image may contain: 1 person, indoor

காற்றைப் பிடித்து 
பைகளில் போட்டுக் கொண்டேன் 
சந்ததிகளுக்குச் சேர்த்து வைக்க!

போன்சாய் மரங்களின் வீதியில் 
மனிதர்களும் 
போன்சாய்க் குள்ளர்களாகதான் மாறக் கூடும்! 

வனங்களின் ஒளிப் படங்களை 
சேகரத்தில் சேர்த்துக் கொண்டேன்... 
பெயரன் பெயர்த்திகளுக்கு 
வனங்கள் கிடைக்காமல் போகலாம்!

சுவை நரம்புகள் செத்து வீழும் காலத்தில் 
அவர்களுக்கான உணவுகள் அழியாமல் 
எப்படிப் பதனம் செய்வேன்?

எந்திரங்களின் எந்திரன்களுக்கு 
மருந்து வில்லைகளே ருசியாக்கக் கூடும்!

ஆட்டிறைச்சியை 
எப்படிதான் கடித்திழுத்தார்களோ? 
என வியப்பர் சந்ததிகள்! 

துடைக்கும் தாளில் குளிக்கும் அவர்களுக்கு 
தாகம் என்பதும் 
செத்துப் போய் இருக்கலாம்! 

மரங்களை வெட்டி மலடாக்கிய எங்களை 
அவர்கள் சபிக்கவும் கூடும்!

நதிகளைத் தொலைத்துவிட்டு 
மணல்களை வாங்கிதான் 
நகரங்களை அமைத்தோம் என்பது 
அவர்களுக்கு எப்படித் தெரியும்? 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts