
முத்துக் குளிக்கப் போனவன்
மூழ்கி விட்டதாகத் தான் சொல்கிறார்கள்!
மூன்றாம் சாமத்தில்
ஒரு பெண்ணோடு அமிழ்ந்ததாய்
பார்க்காதவன் சொல்லிவிட்டுப் போகிறான்!
பிணம் வருமென்றே பாத்திருக்கிறாயா?
யென்று ஞொள் விதைத்து ஒருவன்!
சுறாக்களின் செரிமானத்தில்
மொத்தமாய்ச் சிதைந்திருப்பானோ! ?
பாவம் பொம்மாயி...
புதுப் புருசனை, இனி தேடவேண்டும்!
காத்தானின் கட்டுமரக் கட்டுவலைக்குள்
கட்டாயம் சிக்கிக் கொள்வாள்...
துடுப்புப் போட்டவனுக்குத் தொடுப்பு ஒன்றும்
புதுசல்ல!
கட்டுக்காரிதான் இவளும்...
கட்டாயம் இவள் வலையில்தான்
கட்டுமரங்கள் சிக்கிக் கொள்ளும் !
காரியம் முடியட்டும்
கச்சிதமாய் நாமும் கணக்குப் போடுவோம்!
சுற்றிச் சிதறும் வார்த்தைகளின் வலையில்
இன்னமும் சிக்கிக் கொள்ளாமல்தான் இருக்கிறாள்
பொம்மாயி!
கட்டாயம் வருவான்....
முத்துக் குளிப்பவன் மூழ்கிப் போகமாட்டான்
யென்ற நம்பிக்கையோடு!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment