
மௌனத்தைப் பிழிந்து வைத்துக் கொண்டு
பேசச் சொல்கிறாய்.. என்ன பேசுவது ?
தீப்பற்றியெரியும் வீட்டிலும் உன்னை வாசிப்பேன்
உன்னால் முடியுமா?
என் கவிதை பரந்து கிடக்கிறது
குறிப்பிட்ட மீட்டருக்குள் அடைப்பது சிரமம்
நான் சிருஷ்டித்த வானத்தில்
குருவியாகக் கூட உன்னால் பறக்க முடியாது...
ஏழு கடல், ஏழு வானம் கடந்து செல்ல முடியாதது
கற்பனையின் பற்றாக்குறையாக இருக்கலாம்,
பறந்து கடந்துவந்தால்தான்
என்னிதயத்தைத் தொட்டு நீ ஸ்பரிசிக்க முடியும்...
காதலென்பதை
கடித்துக் காயம் செய்து கொள்ளும் மாயம் என்றால்
நீ எங்காவது வனத்திற்குள்ளோடி
ஓர் ஓநாயைக் காதலித்துக்கொள் !
நான் என் இளவரசனை தேடிக் கொண்டிருக்கிறேன்...
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment