
காதலில்லாத தேசத்தில்தான்
நீயுமிருக்கிறாய், நானுமிருக்கிறேன்,
இரவை இரவாகவும், பகலை பகலாகவும்
பார்க்கக் கற்றுக் கொண்டோம்,
பூக்களின் வாசனைகளை நுகர்ந்துவிட்டு
பூக்களை வீசிவிட்டு நடக்கிறோம்,
கனவுகளேயில்லாத தூக்கத்தை
கட்டிப் பிடித்துக் கொண்டு உறங்குகிறோம்,
உரசல்கள் கூடக் காதல் உராய்வை ஏற்படுத்துமென
உஷாராகவேயிருக்கிறோம்,
புன்னகைப்பதை மறந்துப் போனோம்
கவிதைகளென்பது
என்னவென்றே நமக்குத் தெரியாது,
உனக்குப் பசித்தால் நீயும்,
எனக்குப் பசித்தால் நானும் சாப்பிட்டுக் கொள்கிறோம்
நீ இறந்தால் நானும்
நான் இறந்தால் நீயும் அழப் போவதில்லை
மக்கிப் போகும் எலும்புகளின் பாஸ்பரசில்
சில செடிகள் முளைக்கலாம்
பூக்கள் பூக்கலாம்
பட்டாம் பூச்சிகளும் தேனருந்தி காதல் செய்யலாம்
காதல் அப்போதுதான் துளிர்ப்பதை
நீயும் பார்க்கமாட்டாய் , நானும் பார்க்க மாட்டேன்
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment