நான்
காலத்தின் பின்னோக்கிதான்
நுழைந்திருக்கிறேன்,
இப்போது என் அம்மா
என்னருகில்தான் நிற்கிறாள் !
அத்தா பதித்த முத்தம்
என் கன்னத்தில் இன்னமும்
ஈரமாகவே இருக்கிறது...
சற்று நகர்கிறேன்
மனைவியுடன்
சண்டைப் போட்டுவிட்டுச் சென்ற
அண்ணன்
அண்ணியுடன் அமர்ந்து
சிரித்துப் பேசிக் கொண்டு...
ஆம் !
அவளென் அத்தையேதான்
மாமாவிடம்
இப்போதும் குறும்பு செய்கிறாள்...
எனக்கு வாய்த்தவள்
அப்படியேதான் இருக்கிறாள்
ஆனால்,
பாவாடை தாவணியோடு...
இதுவும் அவளேதான்
இந்த வெட்கத்தை
இதற்குப் பிறகு
நான் பார்த்ததேயில்லை,
தேடுகின்ற சந்தோஷங்கள்
உறவுகளாய்
ஒவ்வொரு நகர்விலும்....
எவ்வளவு மகிழ்வானது !
காலத்தோடு மகிழ்வுகளும்
உதிர்ந்துதான் போகின்றன...
சட்டென்று என்னை
நிகழ்காலத்திற்கு இழுத்துவிட்டான்
என் மகன்
நிழற் படங்களின் தொகுப்பை
பறித்துச் சென்று...
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment