நகரத்திற்கு வந்திருந்தான் வசீகரன்
இங்கெல்லாம் ஆடுகள் வெள்ளெனயெழுந்து
தானூர்திகளில் பயணிக்கின்றன,
மேய்ப்பனிடம் தானாகப் போய்
பட்டியில் அடைந்து கொள்கின்றன,
மேய்ப்பனுக்காகவே
தேவையில்லாததையெல்லாம் மேய்கின்றன,
இரவில்தான் அவற்றுக்கு
அந்தி சாய்கின்றது,
போகும் போது அவற்றின் வயிற்றைக் கீறி
மேய்ந்தவற்றை
மேய்ப்பன் எடுத்துக் கொள்கிறான்,
அவையோ, புல்லுக்கட்டுகளை வாங்கிக் கொண்டு
வயலுக்குத் திரும்பிச் செல்கின்றன
உறங்கும் முன் புசிப்பதற்காக...
வசீகரன் உடனே கிராமத்திற்குக் கிளம்பி விட்டான்
அங்கு அவனுக்காகவே காத்திருக்கின்றன
சுதந்திரமாய்த் திரியும் அவனது ஆடுகள் !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment