Wednesday, 3 May 2017

மர்மத்தில் நுழைந்து

மர்ம கதைக்குள் நுழைந்தவன் 
வெளியே வரமுடியாமல் தவிக்கிறேன், 
என்னைச் சுற்றிலும் சில பார்வைகள் 
கண்காணித்துக் கொண்டே தொடர்கின்றன, 
மதியுகன்கள் 
மடமைகளின் காலடியில் உட்கார்ந்திருக்க 
ஆலயங்களில் 
துப்பாக்கிகள் விழித்திருக்கின்றன 
மரணங்களின் மர்மச் சங்கிலியில் 
ஹிட்ச்சாக் எழுதிக் கொண்டிருக்கும் 
திரைக்கதையில் 
இடிஅமீனும் ஹிட்லரும் 
மீண்டும் பிறந்துவிட்டதாக 
சாத்தானின் தூதர்கள் அறிவிப்பு செய்கிறார்கள் 
அருகருகே நடக்கும் 
கொலைகளுக்கான அத்தாட்சிகளும் 
உடனே அழிந்து போகின்றன 


ராணியின் சமாதியில் ராணியின் ஆவி 
நாற்காலி போட்டு அமர்ந்திருப்பதாக 
பார்த்தவர்கள் சொல்கிறார்கள்... 
குனிந்து நிமிர்ந்து கொண்டிருந்த 
கோடாங்கி 
தன்மீது சாமி வந்திருப்பதாகக் குறி சொல்கிறான் 
உப்புச் சுவர்களின் வெடிப்புகளின் 
விவசாயிகளின் பிணங்கள் புதைந்திருக்கின்றன 
அவர்களின் காலடி மண்ணையெடுத்து 
மோடி மஸ்தான் 
செய்வினை செய்து கொண்டிருக்க 
செயலிழந்த வினைகளாக 
மக்கள் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் 
துரத்திவரும் 
இரத்தக் காட்டேறிகளிடமிருந்து தப்பிக்க 
அனைத்துவழிகளும் அடைபட்டுக் கிடக்கிறது 

முதலில் எழுதிய வார்த்தைகளை 
தவறாகவே எழுதிவிட்டேன் 

மர்மக் கதைக்குள் நுழைந்தவர்கள் 
வெளியே வரமுடியாமல் தவிக்கிறோம் 
எங்களைச் சுற்றிலும் சில பார்வைகள் 
கண்காணித்துக் கொண்டே துரத்துகின்றன! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts