
சில பக்கங்களில்
ஹிட்லர் காணாமல் போகிறான்,
அடிக் குறிப்பில் அவன் இறந்துவிட்டதாக
செய்திக் குறிப்பொன்று இருக்கிறது...
நேசப் படைகள்
சுட்டுவிட்டதாகச் சொன்னார்கள்,
அவனும்
மக்களுக்காகத்தான் உள்ளே நுழைந்தான்,
அதிகாரம் அவனை ஆட்சி செய்தது
அதிக பட்சம் குண்டுகளில்லாத பிஸ்டலுக்குள்
ஆணவம் உட்கார்ந்திருந்தது,
முதல் கொலையில் பயந்து கிடந்தவன்
அடுத்தடுத்த கொலைகளில்
ஏளனம் இழைத்துக் கொண்டான்,
பயம் அவனுக்கு மிகவும் பிடித்த ஆயுதம்
அதை விதைத்துத்தான்
ஆதாயத்தை அறுவடை செய்தான்,
ஓநாயை அடிக்க ஊர் திரண்டது
பயம்
இப்போது அவனைப் பார்த்துச் சிரித்தது,
அழுதிருப்பான் யாருக்கும் தெரியும் ?
அவன் முகத்தில்
அவனே உமிழ்ந்து கொண்டதை
யார்தான் பார்த்திருக்க முடியும் ?
பயத்தால் - ஹிட்லர் காணாமல் போனான்
பயத்தால் - ஹிட்லர் சுட்டுக் கொண்டான்
பயத்தால் - ஹிட்லர் சுடப்பட்டான்.
பின்குறிப்பில் ஏதாவதொரு ஹிட்லர்
இப்படித்தான் எங்காவது உட்கார்ந்திருக்கிறான்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment