புதுக்கவிதைகளின் முன்னோடி, மரபின் வாசனை நுகர்ந்த வண்டு, கவிதை வானின் பட்டாம்பூச்சி கவிஞர்.நா.காமராசன் இன்று மறைந்துவிட்டார். காலம், பூத உடலை மட்டும்தான் கைப்பற்றிச் செல்கிறது, அவரது புகழையும், எழுத்துகளையும் அல்ல...
1942 ம் ஆண்டுத் தேனீ மாவட்டம் மீனாட்சிபுரத்தில் பிறந்தவர். மதுரை தியாகராசர் கல்லூரியில்தான் உயர்க் கல்வியை முடித்தார். அதே கல்லூரியில் நண்பராக இருந்தவர்தான்,முன்னாள் சபாநாயகர்.க.காளிமுத்து அவர்களும்.இவர்களின் நட்பு கடைசிக் காலம் வரை தொடர்ந்து நிலைத்தது.
மிகவும் உற்சாகமான பேர்வழியாகவே இருந்தார் கவிஞர் அவர்கள். நண்பர்களுடன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர், இனிய உதயத்திற்கு அளித்த பேட்டியொன்றில், தன் கல்லூரி காலத்தில் கலில் ஜிப்ரன் கவிதைகளில் தான் பைத்தியமாகத் திரிந்ததாகவும், அவரது BROKEN WINGS (முறிந்த சிறகுகள்) என்ற கவிதை நூல் தான், தன்னைக் கவிதைகளின் பக்கம் ஈர்த்ததாகவும்,அந்த நூல் இன்றும் தனது வேதபுத்தகம் என்றும் சொல்லியிருந்தார்.
உருவகங்களைக் கையாள்வதில் மிகுந்த ஈடுபாடு காட்டியவர், தனக்கு உருவகக் கவிதைகளின் மீது ஆர்வம் கூட்டியதாகக் கேரளாவைச்சேர்ந்த வயலார் ராமவர்மாவையே கைக்காட்டுகிறார். ராமவர்மா மலையாள திரைப்படப் பாடலாசிரியரும் கூட.
கம்பரையும்,இளங்கோவடிகளையும் மற்றும் கவிஞர் சுரதாவையும் முன்னோடிகளாக எடுத்துக் கொண்டு கவிதைகளை எழுதத் தொடங்கியவர், கம்பரின் கற்பனையும், பாரதிதாசனின் சிந்தனையும் ஒரு கவிதையில் இணைந்துவிட்டால் அந்தக் கவிதை உயிர்ப்புடன் என்றுமிருக்கும் என்பது அவர் அடிக்கடி சொல்வதாகும். நிகழ்காலக் கவிஞர்களில் அப்துல்ரகுமான், இன்குலாப், தமிழன்பன் மூவரையும் மிகவும் நேசித்தவர். கவிதையெழுதும் இளைஞர்களுக்கு அவர்களின் கவிதைகளைப் படிக்கும்படி வலியுறுத்துவார்.
கலைமாமணி, பாரதிதாசன் விருதுகளைப் பெற்ற கவிஞர் நா.காமராசன், கறுப்பு மலர்கள்,தாஜ்மஹாலும் ஒரு ரொட்டித் துண்டும், சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் உட்பட 33 கவிதை தொகுப்புகளையும் மரபின் பிரியம் நழுவாமல்,'பெரியார்காவியம்'என்ற கவிதைக்காவியத்தையும் வடித்து வெளியிட்டார்.
கவிஞரை திரையுலகிற்கு அழைத்துவந்தவர், நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள்தான். கவிஞரின் ,'கறுப்பு மலர்கள்' கவிதை நூலை படித்துவிட்டு அதன் ஈர்ப்பில்தான் தனது 'நீதிக்கு தலைவணங்கு' படத்திற்காகப் பாடலெழுத பணித்தார். அதில் அவரெழுதிய, 'கனவுகளே..ஆயிரம் கனவுகளே!' பாடல்தான் முதல் திரையிசைப் பாடலாகும். அவரை உச்சத்தில் நிறுத்திய பாடலென்றால் அது, பல்லாண்டு வாழ்க படத்தில் இடம் பெற்ற,'போய்வா நதியலையே...இந்த பூமிக்கு நீர் கொண்டுவா!' என்ற பாடல்தான். இதுவரை 600 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
திரு நங்கைகளைப் பற்றி அவரெழுதிய இந்தவரிகள் காலத்திற்கும் நிற்க கூடியது
'தாய்ப் பாலின் சரித்திரத்தில்
சதிராடும் புதிரானோம்'
கவிதையுலகில் புரியாத புதிராக இல்லாமல் பொக்கிஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர். நா.காமராசன் அவர்களுக்குச் செலுத்துவோம் தமிழ் அஞ்சலி !
-மு.முகமது பாட்சா

No comments:
Post a Comment