அவளைத் தேடிக் கொண்டிருக்கிறான்...

அனைவரும் சென்ற பிறகு
அந்த இடத்திற்குத் திரும்பிவந்தான்
மணலில் மண்டியிட்டுத் தோண்டினான்
அவளை வெளியே எடுத்துவர.
சடலத்தைப் புதைக்கப் பயன்படுத்தும் மண்வெட்டியால்
தோண்ட முடிவதைக் காட்டிலும் ஆழமாக
உதிரும் மணல், அக்குள் வரை.
அப்படியும் அவனது விரலிடுக்குகளுக்கு அகப்பட்டதெல்லாம்
சின்ன வெள்ளை நண்டுகள் மட்டுமே
தொடர்ந்து தோண்டினான் கைகளால்
கடலேரி முழுவதிலும், அவளை நினைத்து அழுதுகொண்டே
மண்ணைப் பிய்த்து எறிந்தவாறு
அவளது சுவாசம் அவன் காதை நெருடுகிறது
நிமிர்ந்து பார் நிமிர்ந்து பார்
மரகதப் பச்சை நெஞ்சுடைய தேன் சிட்டின்
மேலெழும்பும் சிறகடிப்பின் மீது
நான்பறந்து கொண்டிருக்கிறேன்
நிமிர்ந்து பார், என் அன்பே
நான் அப்பொழுதே தப்பிவிட்டேன்
என்றாள் அவள்
மனதினூடாகத் தோண்டிக் கொண்டிருந்த
அவனுக்குக் காதில் எதுவும் விழவில்லை
அவன் நிமிர்ந்து பார்ப்பதற்காக
அவள் காத்துக் கொண்டிருக்கிறாள்.
.
கவிதை: கேரென் ப்ரெஸ் (தென்னாப்பிரிக்கப் பெண் கவிஞர்)
.
தமிழாக்கம் வ.கீதா எஸ்.வி.ராஜதுரை
No comments:
Post a Comment