Monday, 21 August 2017

நான் இரசித்த கவிதைகள் - 44

 ஒருவரியேனும் 


உங்களோடு சேர்ந்து வாக்களிக்கிறேன் 
உங்களோடு சேர்ந்து திரைப்படம் பார்க்கிறேன் 
அவ்வப்போது 
உங்களோடு சேர்ந்து மது அருந்துகிறேன் 

உங்கள் விரல்களில் இருக்கும் வெண்சுருட்டை 
போதை நிறைந்த அப்பொழுதில் 
புகைக்கவும் செய்கிறேன் 
என்பதினால் 
நீங்களாக நான் எப்போதும் ஆனதில்லை 

என்றாவது மலர்கள் மொழிந்ததுண்டா 
உங்களிடம்? 
நிலவின் இதழ் உங்கள் கன்னம் 
தீண்டியிருக்கிறதா? 

இப்பெரிய நீலம் 
உம் கண்களில் நிரம்பி வழிந்திருக்கிறதா? 

வெட்டு வாங்கிய மரங்கள் 
உம்மிடம் சொல்லி அழுதிருக்கின்றனவா? 

தோண்டப்பட்ட மலையில் வழியும் 
இரத்தக் கவிச்சியை உணர்ந்திருக்கிறீரா நீவீர்? 

நீ இளைப்பாறும் இந்நிழல் 
நீரே நட்டு வளர்ந்த மரமா? 
சுவைக்கும் கனியும் அப்படியோ? 

நீரில்லா இம்மணல் வெளியில் 
நதியின் கண்ணீர் ஓடுகின்றதைக் கண்டீரா? 
வியர்வைக்கு நியாயமான விலை கேட்டதற்கு 
உம் சகமனிதன் கொளுத்தப்பட்டான் 
பார்த்துக் கொண்டிருந்தீர்கள் 

உம் சகமனிதனின் தலைமையைப் 
பொறுத்துக் கொள்ளாமல் 
அவனை வெட்டி முண்டமாக்கினர் 
பார்த்துக் கொண்டிருந்தீர்கள் 

உம் சக மனிதனின் வாயில் 
பீ திணித்தார்கள் 
பார்த்துக் கொண்டிருந்தீர்கள் 

அற்புதமாக எழுதும் நீங்கள் 
இம்மானிட இழிவுக்கு எதிராக 
ஒருவரியேனும் எழுதியதுண்டா? 

ஓசோன் படலம் கிழிந்துவிட்டது 
பூமி வெப்பம் அடைந்துவிட்டது 
ஆயிரமாண்டின் பண்பாடு 
அழியத் தொடங்குகிறது 

என்று புலம்பும் வாயிலிருந்து 
இந்த இழிசெயல்கள் மேல் 
காறி உமிழ எச்சில் 
ஏன் இல்லை? 

நூல்: வண்ணங்களை விழுங்கிப் பெருத்திருக்கும் இருட்டு 

கவிஞர் ரகசியன்

No comments:

Post a Comment

Popular Posts