
அம்முவும் நானும்
அடிக்கடி
விவாதங்களில் சிக்கிக் கொள்கிறோம் !
ஒரு முறை அவள் ஜெயிப்பாள் ,
மறு முறை நான் தோற்றுப் போவேன் !
கேள்விகளின் கொக்கிகளை வளைப்பதில்
அவள் சாமர்த்திய சாலி !
ஒரு முறை
தேசம் என்பது என்னவென்று கேட்டாள் ,
மக்கள் சூழ்ந்த நிலமென்றேன் ,
அப்படியென்றால் ,
உலகமென்றால் ,என்னவென்று கேட்கிறாள் !
காந்திதான் சுதந்திரம் வாங்கினாரா ? என்று கேட்டாள்
ஆம் என்றேன்
அப்படியென்றால் , நாமெல்லாம்
இன்னமும் அடிமைகளா ? என்கிறாள் !
அதை நமக்குக் கொடுத்து விட்டார் என்றேன்
அப்படியென்றால் ,
நாமெல்லாம் சோம்பேறிகளா ? என்று கேட்கிறாள் !
நம், தேசக் கொடிக்கு ஏன் ,
மூன்று வர்ணங்களென்றவள் ,
வர்ண ஆசிரம விதிகளில்
மற்ற வண்ணங்கள் தீண்டப் படாதவையா ?
என்று கேட்கிறாள்,
நான் என்ன சொல்லுவேன் !
சுதந்திர தினம் எதற்காக ? என்று கேட்கிறாள் ,
அடைந்த சுதந்திரத்தைப் போற்றும் நாளென்றேன் ,
சிரித்துவிட்டுக் கேட்கிறாள்,
அப்படியென்றால்
பிரமதருக்கு ஏன் பாதுகாப்பு ?
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment