
என்னைத் துளைத்தூடுருவும் குண்டுகள்
ஈயத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டிய
அவசியமில்லை,
உன் வார்த்தைகளால் கூட
வடிவமைக்கப் பட்டிருக்கலாம்.
என் பாதைகளை இருட்டாக்கி விட்டுத்தான்
நீ துப்பாக்கியின் விசைகளையே
அழுத்துகிறாய்.
மௌனம் சூழ் அடர்வெளியில்
என்னை ஓடவிட்டுச் சுடுவது
உனக்கு என்றுமே கை வந்த கலை,
நான்
இறந்தும் பிறந்தும் அடிக்கடிச் சாகிறேன்,
என் கல்லறைப் பூக்கள் மட்டும்
என்றுமே காய்வதேயில்லை.
இறந்து கிடக்குமென்னை
எல்லோரும் பார்த்துவிட்டுப் போகிறார்கள்
நான்தான் உன்னைச் சுட்டுவிட்டதாக
அவர்களிடம் சொல்லிவிட்டு அழுகிறாய்,
நான் இப்போது
இறக்க வேண்டுமா? அல்லது பிறக்க வேண்டுமா?
அதையும் சொல்லிவிட்டு போய்விடு.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment