
போதி மரம்
வெட்டப் படுவதாகச் சொன்னார்கள்,
விறகுகளை வாங்கிச் செல்ல
ஒரு கூட்டம் நின்று கொண்டிருந்தது ,
வேர்களில் மூலிகை குணம் இருப்பதாக
ஒருவன்
வியாபாரம் செய்து கொண்டிருந்தான் ,
இலைகளையெல்லாம் ஒருவன் சேகரித்தான்
புத்தனுக்கு
நிழல் கொடுத்த விசிறிகளாம் அவை ,
அமோக வியாபரிகள்
அடுத்தப் போதி மரம் தேடி அலைகிறார்கள்,
கார்ப்ரேட் உலகில்
எல்லாம் விலையாக்கி விடும் , நம்பிக்கை ,
பட்டா இல்லாத நிலத்தை
வளைத்துப் போட்ட பிட்சுகள்
ஆலயம் எழுப்பித் தூபம் காட்டுகிறார்கள் ,
போதி மரக்கன்றுகள்
அரசுடைமையாக்கப்பட்டு
காவலோடு கல்லா நிரப்பிக் கொண்டது,
அந்த வழியாகத் தான் போகின்றான்,
திரும்பி வந்த சித்தார்த்தன்....
போதி மரம் வெட்டிய இடத்தில்
ஆசை மரம் துளிர்த்திருப்பது
அவன் கண்களுக்கு மட்டுமே தெரிந்தது.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment