
கொல்வதும் கூட ஒரு கலையாம்,
கல்விக் கூடங்களில்
கற்றுக் கொடுக்காமல் நிகழ்கிறது !
பெண்களெல்லாம் அடிமைகள்
மனதிற்குள் ஊறப் போட்டச் சிந்தனைகள்
ஊற்று நீராய் வடிகின்றது !
பயத்தை விதைக்கும்
தடித்த ஆண்மைகள் !
காபியும் காதலியும் ஒன்றுதான்
கற்றுக் கொடுக்கிறது விளம்பரம் !
கணக்கில் சிக்காவிட்டால் கணக்கை முடி
கதாநாயகன் கதைகளில் சொல்லித் தருகிறான் !
வசனமெழுதியவன் வீட்டுப் பெண்
நாணமடைகிறாள் ஆபாச வார்த்தைகளில் !
செல்போன்களில் காதலிக்கக் கற்றுத் தருகின்றது
சிம் கார்டு நிறுவனங்கள் !
தவறுகளுக்கும் நியாயம் கற்பிக்க
தனியொரு கூட்டம்,
தூமைகளில் நிறம் கூட்டி வர்ணம் தீட்டும்
நிர்வாண ஓவியர்கள் !
பிணமாய்ப் போய் ,பிணமாய் வருகிறார்கள்
மாணவிகள் !
காதலிக்க மறுத்தவளை ஒருவன் வெட்டுகிறான்
இன்னொருவன் அமிலத்தால் அழிக்கிறான் ,
பெற்றவள்களின் முலைக் காம்புகளில்
அமிலம் சுரக்கின்றது !
சாதியக் கூறுகளின் இடையே ,
கூரிய நகங்களுடன் ஆணாதிக்கச் சிந்தனைகள் !
முடியாத இந்தக் கவிதையைப் போல்
பெண்களின் சுதந்திரமும்...
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment