
கரடான நிலங்களெல்லாம்
கழனிகளாய் மாற வேண்டும்!
மலடான கல்வி நமக்கு-இனி
மலிவாக கிடைக்க வேண்டும்!
குருடான அரசியல் தளம்
பார்வை பெற்று விளங்க வேண்டும்!
சரடு விடும் சல்லாபிகளை
சாய்த்து உரமாக்க வேண்டும்!
வரண்ட நதி பாதை யெல்லாம்
திரண்டு வெள்ளம் சூழ வேண்டும்!
சுற்றுச் சூழல் பாதிக்காத
மின்சாரம் நமக்கு வேண்டும்!
செய் தொழில் வளர்ச்சி யெல்லாம்
சீனத்தை மிஞ்ச வேண்டும்!
அயல் நாட்டு வணிகத்தில்-நாம்
கொடி கட்டி பறக்க வேண்டும்!
ஜாதி பார்க்கும் பேதமையை
தீ யிட்டு கொளுத்த வேண்டும்!
அண்ணன் தம்பி உறவு போல
அண்டை உறவு இருக்க வேண்டும்!
சாமானியன் காணும் கனவு
நிச்சயமாய் பலிக்க வேண்டும்
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment