Wednesday, 30 August 2017

புத்தன் எங்கே?

No automatic alt text available.

போதிமரத் துண்டுகளை வெட்டி
துப்பாக்கிக் கட்டை செய்தவர்களைக் கேட்டேன்
புத்தன் எங்கே?
அவர்கள் காட்டிய திசையில்
அவன் கால் பரப்பி இறந்து கிடந்தான்,
அவன் உதிரங்களை பூசிக் கொண்டவர்கள்
அவனுக்கு ஆராதனை செய்து கொண்டிருந்தார்கள்,
மௌனம் விதைத்தவனைப் புதைத்துவிட்டு
மௌனத்தை சிதைத்துக் கொண்டிருந்த அவர்கள்,
தமிழர்கள் மற்றும் 
ரோஹிங்கியாக்களின் இரத்தத்தை
தீர்த்தங்களாகப் பருகியே பரவசம் கண்டார்கள்,
மிதந்து கிடக்கும் 
பிணங்களின் மேல்தான் படுத்துறங்கினார்கள்,
போதிக்காத தியானத்திற்குள் புதைந்து போனவர்கள்
புத்தனை எழுப்புவதற்காக மணியாட்டியதுதான்
மிகவும்  வேடிக்கையாக இருந்தது
பிட்சுகளின் கைகளில் இப்போதெல்லாம்
பிச்சைப் பாத்திரங்கள் இருப்பதேயில்லை,
துப்பாக்கிக் குழல்களில்தான் 
சூப்புகளை உறிஞ்சிக் குடிக்கிறார்கள்.
இறந்து கிடக்கும் புத்தனை எழுப்ப முயற்சிக்காதீர்கள்
அவர்கள் அவனை மறுபடியும் சாகடித்துவிட்டுத்தான்
பூசைகளையே தொடர்வார்கள்....
அவனாவது நிம்மதியாக இனி உறங்கட்டும்.

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts