
என்னைத் தேடிச் சென்ற போதுதான்
நான் தொலைந்து போனதாக
என் மனைவி சொன்னாள்,
கண்டு பிடித்துத் தருவதாகச் சொன்னவன்
எல்லாமே, மாயையென்றான்,
அவன் மாய வலைக்குள்
மயங்கிக் கிடக்கிறது ஒரு கூட்டம் ,
நிர்வாணம் பரிபூரணம் .
ஒருவரை ஒருவர் உறித்துக் கொண்டு ,
ஒருவரை ஒருவர் விதைத்துக் கொண்டு ,
பிசுபிசுப்பில் சிக்கிக் கொண்டது சிறு மூளை,
தேடுவதொன்றும் அத்தனை சுலபமல்ல ,
எதைக் கொண்டு வந்தாய் - நீ
எதைத் தேடுகின்றாய் ....
கீதாமொழியைச் சொல்லி விட்டு
தேடவும் சொல்கிறான்,
ஆசையைத் துறந்தவன் கழுத்தில்
ஆடம்பர முத்து மாலைகளெதற்கு ?
அகப்படமால் நழுவச் சொல்கிறது மனசு ,
திரும்பிய என்னிடம்
கிடைத்து விட்டீர்களா ? என்றாள் மனைவி,
வா,உன்னில் என்னைத் தேடுகிறேன்
என்னில், உன்னை நீ தேடு .
.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment