Friday, 18 August 2017

நான் இரசித்த கவிதைகள் - 39


நோக்கம்

Image may contain: one or more people and closeup 

நான், அண்ணன், தம்பி, தங்கை 
நான்கு பேர்! நூறு பேதம்...! 

ஒல்லியாய் வடிந்து, கூனி 
ஒடிந்த வில் ஆவான், அண்ணன்! 
கல்லெனத் திரண்டு, சின்னக் 
களிற்றினை ஏய்ப்பான் தம்பி! 
முல்லையே தங்கை! நானோ 
முருக்கையின் பிரதி! இந்தப் 
பல்லுருப் பேதத்தோடு 
பயந்தவர் ஒரு தாய், தந்தை! 

நான், அண்ணன், தம்பி, தங்கை 
நான்கு பேர்! நூறு பேதம்...! 

நிறத்தினில் அண்ணன் நெய்யை 
நிகத்தவன்! தம்பி சாயல் 
வறுத்தநாட் டரிசி! என்றன் 
வண்ணமோ கழுகுப் போர்வை! 
உரித்தமாங் கனியாள் தங்கை! 
ஒரு படிப் பாலில் இந்த 
நிறத் தொகை எதனால்? எம்மை 
நிறுத்தவர், ஒரு தாய், தந்தை! 

நான், அண்ணன், தம்பி, தங்கை 
நான்கு பேர்! நூறு பேதம்...! 

ஓவியப் புலவன் அண்ணன் 
ஒளி நிழல் கரைவான்! இந்தப் 
பாவியோ, அப்பனோடு 
கழனியில் மாடு, தம்பி 
சேவைகள், மற்போர், ஆட்டம் 
திருவிழாப் பருகும்! எங்கள் 
பூவையோ, கூண்டுக் கிள்ளை! 
பெற்றவர், ஒருதாய், தந்தை! 

நான், அண்ணன், தம்பி, தங்கை 
நான்கு பேர்! நூறு பேதம்...! 

வீட்டுக்குள் - ஒருதாய், தந்தை 
விளைச்சலின் ஊழல் கோடி! 
நாட்டுக்குள் - மேடு, பள்ளம் 
வெயில் - மழை, கூதலென்று 
காட்டுக்கூப் பாடு போட்டே 
கடவுளில் “நோக்கு” நாட்டி 
வேட்டுக்கள் தீர்ப்பான், தம்பி 
வெறும்பயல், விடுங்கள் பாவம்! 

புரட்சிக் கமால் ( புதுக் கவிதைகளின் முன்னோடிகளில் இவரும் ஒருவர் . இயற்பெயர் :எம்.எஸ்.சாலிஹ்)

No comments:

Post a Comment

Popular Posts