Thursday, 31 August 2017

மரண விளையாட்டு...

Image may contain: one or more people

இறந்து கிடந்தவனின் கையில் 
இரத்தத்தில் 
நீலத் திமிங்கிலமொன்று 
நீந்திக் கொண்டிருந்தது, 
விளையாட்டொன்று 
அவனைத் தின்றுவிட்டதாக 
எல்லோரும் பேசிக் கொண்டார்கள், 
மதிப்பிழந்த பணம் 
மதிப்போடு வந்துவிட்டதாக 
மத்திய வங்கி அறிவிக்க, 
சிக்காத கறுப்புப் பணம் 
சில நூறு பேர்களின் கழுத்தை 
அறுத்துவிட்டு நகர்ந்திருந்தது, 
செத்த எலிகளாய் சிதறிக் கிடக்கும் 
குழந்தைகளின் கூட்டத்தில் 
ஆக்ஸிசன் பற்றாக்குறை 
காரணமாய் வந்து 
உட்கார்ந்து கொண்டது, 
கல்வியே சரியில்லையென்று 
கலைமகளை 
விற்றுக் கொண்டிருந்தவர்களின் 
சாட்டைச் சுழற்சியில் 
சில நூறுபேர் செத்துக் கிடந்தார்கள், 
வயல்களில் 
இறந்து கிடந்தவர்களின் விளையாட்டு 
என்னவென்று 
இதுவரை யாருக்கும் தெரியவில்லை, 
மாட்டுக்கறி விளையாட்டில் 
மற்றவர்கள்தான் 
நம்மைச் சாகடிப்பார்கள், 
மதவெறி விளையாட்டில் 
யாரும் யாரையும் சாகடிக்க உரிமையுண்டு, 
வாய் மூடிச் சாகும் விளையாட்டில் 
இந்தியர்களை விஞ்சிக் கொள்ள 
இதுவரைக்கும் யாருமேயில்லை, 
செத்துச் செத்து விளையாடுவதுதான் 
எங்களின் பொழுது போக்கு, 
இதில் புளூவேல் விளையாட்டு மட்டும் 
ஏன் தனியா கிடக்கு! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts