
நான்
கவிதைக்கான தளத்தை உருவாக்கி
கம்பியூட்டர் முன் உட்கார்ந்திருக்கிறேன்,
வெற்றிடத்தைப் பார்வைகள்
முதலில் நிரப்பிக் கொள்கின்றன,
மூளை சற்றே கண்மூடி கண் திறக்கிறது,
எழுத்துகளை வார்த்தைகளாக்கி
வட்டமிட்டு ஊதுகிறது
விரல்களின் நுனியில்
உட்கார்ந்து கொண்ட வார்த்தைகள்,
தட்டச்சின் விசைகளுக்குள் விளையாடி
இணையத்திற்குள் நுழைந்து மெல்லச் சிரிக்கிறது,
கண்கள் தாயாகி பரவசமடைய
வார்த்தைகள் பால்கேட்டு அடம் பிடிக்கின்றன,
நீ கொடுத்த டீ
மெல்ல இதம் வருடி என் இணையத்தில் நுழைய
பரவசம்
மேலும் சில வார்த்தைகளைப் பிரசவிக்கின்றன,
இடையே நீ மெல்லிதழால் இதம் வரைகிறாய்,
தலை கோதி கன்னத்தில் பழம் பறிக்கிறாய்,
வார்த்தைகள் குளிராகி
நடுக்கத்தில் போர்வையைக் கேட்கின்றன,
உன் இடது கையணைப்பில் இதயம் சூடாக
வார்த்தைகள் வசமிழந்து ரசம் பிழிகிறது,
இருவரும் சேர்ந்து கவிதையைப் பருகுகிறோம்
நதியொன்று நம்மை நனைத்துவிட்டு நடந்து போகிறது,
போதை தெளிந்து நிமிர்ந்து பார்க்கிறேன்
கவிதையின் அடியில்
என் பெயர் ஒட்டிக் கொண்டிருக்க,
கவிதை முழுவதும் நீ மறைந்து கொண்டிருக்கிறாய்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment