
அகலிடமெங்கும் தீ கொழுந்துவிட்டெரிய
அனைவரும் ஓடியாடி விளையாடுகிறோம்,
பற்றியெரியும் தீயில்
தேகம் பொட்டெனப் பொசுங்காமல்
பொலிவிழந்து சிரிக்கிறோம்,
சீமையெண்ணெய்க் குழாய்கள்
தீயினை அணைக்க எத்தனிப்புகள் செய்கின்றன,
கால் நழுவும் பூமியில்
கச்சா எண்ணெய்கள் பீறீட்டெழ,
காய்ந்தக் கானகம்
சாமரம் வீச முயற்சிக்கிறது,
ஓசோனின் ஓட்டைகள் நிழல் விரிக்கை விரிக்க
சூர்யக் கதிர்கள் குளிர் மழை பொழிகின்றன,
அரசனின் நாற்காலியை
ஆயுதம் தாங்கிய பண மூட்டைகள் காவல் காக்க,
செத்து விளையாடக் கடலுக்குள் வீழ்கிறோம்
செத்த மீன்கள் மீண்டும் எங்களைக் கரை சேர்க்கிறது,
இறந்துவிட்ட எங்களிடம் ஆதார் கேட்டு
சலுகைகள் வழங்க அரசன் காத்திருக்கிறான்,
நாங்களும் சாபத்தைப் பதிவு செய்துவிட்டு
மீண்டும் மண்ணுக்குள் புதைந்து
மரண விளையாட்டை மகிழ்வுடன் களிக்கிறோம்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment