Friday, 25 August 2017

நான் இரசித்த கவிதைகள் - 50


நான் இல்லாமல் என் வாழ்க்கை



நான் இல்லாமலே 
என் வாழ்க்கை 
எதேச்சையில் 
அருத்திரண்டது

வடிவ விளிம்புகளைக் 
கற்பிக்க 
நான் இல்லாததால் 
நீல வியாபகம் கொண்டது

எதை துறந்தோம் என்று 
அறிய வேண்டாத 
நிம்மதியில் திளைத்தது

உணர்வுகளின் 
பொது ரீங்காரம் மட்டும் 
தொடர 
நிழல் வீழ்த்தாமல் 
நடமாடியது

கூரைகளுக்கு மேலே 
தன்மைகளின் எதிர்ப்பை 
அலட்சியம் செய்து 
அசைவு தெரியாமல் 
பறந்து திரிந்தது

பூமியை துளைத்து 
மறுபுறம் வெளிவந்தது

பிம்பங்களின் துரத்தலுக்கு 
அகப்படாமல் 
நுட்பம் எதுவுமற்ற 
சூன்யத்தை அளைந்தது

மரணப் பாறையிலிருந்து 
குதித்து விளையாடியது

காலத்தின் சர்வாதிகாரம் 
புகைந்து அடங்குவதை 
வேடிக்கை பார்த்தது

தத்துவச் சுமை கரைந்து 
தொலைதூரத்து வாசனையாய் 
மிஞ்சிற்று

எனது குறியீடுகளின் 
குறுக்கீடு 
இல்லாது போகவே 
தன்னைத் தனக்குக் 
காட்டிக் கொண்டிருப்பதையும் 
கைவிட்டது 
.
கவிஞர். அபி (எ) ஹபிபுல்லாஹ்

No comments:

Post a Comment

Popular Posts