
நீ பிணைத்த சொற்களில் எது காதல்மொழி?
உன் மனதிற்குள் மௌனித்த
மரணச் சொற்களை நானெப்படி அறிவேன்?
சில்லிட்டுவிழுந்த மழைத் துளிகளின்
க்ளிங் ரீங்கார சப்தம் காதலை இசைக்கிறது,
பின்னிக் கிடக்கும் கொடிகளில்
எது நீ? எது நான்?
துன்பங்களில்தான் காதல் உட்கார்ந்திருப்பதாக
சூபிக் கிழவன் சொல்லிவிட்டுச் சிரிக்கிறான்,
மோனக் கிறுக்கர்களுக்கு
காதலின் சோகமும் காதலாகவே இருக்கிறது,
உணர்வுகளுக்குள்
ஒளிந்திருக்கும் ஒற்றைச் சொல்லை
கண்கள்தானே முதலில் கவிதை செய்கின்றன...
ஒப்பனையில்லாத நம் புன்னகைகள்தானே
ஒப்பந்தம் போடுகின்றன,
பிறகேன் வார்த்தைகளை ஒளித்து வைக்கிறாய்?
வாசலில் நிற்பவன் யாசகனல்ல
உன் வாசகனென்பதை உணர்ந்து கொள்.
காதல் மொழிகள் சிறையிலிருக்கின்றன
சர்வாதிகாரியே உடனே விடுதலை செய்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment