
நீர்மைத் திமில் திரள்களாய்
சோபித்து உட்கார்ந்திருக்கும்
பனித் துளிகளின் யோசனை வாழ்வில்
சட்டென்று முடித்துப் போகும்
வெப்பச் சலனத்தில்
வாழ்க்கையின் மிச்சம் ஒளிந்திருக்கலாம்,
கூட்டுப் புழுக்களின் பூட்டையுடைத்த
வண்ணத்துப் பூச்சிகளின் சிறகுகளில்
அதன் வாழ்க்கையின்
எச்சம் எழுதப் பட்டிருக்கலாம்,
தவளைகளின் அச்சம்
அரவம் என்றாலும்
சர்ப்பங்களின் தேவையென்னவோ
உணவாகத்தான் இருக்கிறது,
காற்றேயில்லாத தேசத்தில்
மேகங்களால்
மழைப் பரவலை எப்படி நிகழ்த்த முடியும்?
தேடுவதையே விட்டு விட்டால்
யாருமிங்கு அநாதிதான்...
சிந்திக்கும் மூளைக்கும்
மூச்சுக்காற்றைச் செலுத்துகிறேன்
உயரத்தில் என்னாலும் பறக்க முடிகிறது!
- மு.முகமதுபாட்சா
No comments:
Post a Comment