
ஒற்றைத் துணியில் இடை மறைத்து
தெருவினோரம் சற்றே யுறங்கும்
எம் தோழனைக் கேட்டுப் பார்,
சுதந்திரம் கிடைத்ததா ?
பட்டயம் படித்து விட்டுப் பாழ்வெளியில்
வெட்டைத் தெரு நாயாய் வீதியிலலையும்
எம் சோதரனைக் கேட்டுப் பார்,
சுதந்திரம் கிடைத்ததா?
தொட்டி மலமள்ளும் பாழ் நிலை மாறாமல்
கெட்டதொரு புழுவாய் தினம் சாகும்
எம் நண்பனை நீ,கேட்டுப் பார்,
சுதந்திரம் கிடைத்ததா ?
நட்ட வயலை நடு இரவில் பறித்து
வெட்ட வெளியில் விடுபட்டுத் தவிக்கும்
எம் உழவனையும் கேட்டுப் பார்,
சுதந்திரம் கிடைத்ததா ?
ஒற்றைக் கொடியேற்றி ,மிட்டாய் கொடுத்து
சிட்டாய்ப் பறக்கும் மந்திரியே,இன்னமும்
பட்டா இல்லாமல் வாழும்
எம் பாழ் ஏழைகளையும் கேட்டுப் பார்,
சுதந்திரம் கிடைத்ததா?
முட்டாள் தேசமென்றே முணங்கித் திரியும்
ஆள்பவரே ,
இவர்கள் ஒட்டாக முடிவெடுத்து
இனியுமொரு சுதந்திரக் கொடி பிடித்தால்
நீங்களும்தான் அன்னியரே !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment