
இளவரசியைக் கடத்திச் சென்றவனை
தேடிச் செல்கிறான் விறகுவெட்டி ,
மாயக் கம்பளத்தில் கடத்திப் போனதாக
கழுகொன்றுச் சொல்லிவிட்டுப் பறக்கிறது ,
இறகுகளை வரைந்து கொண்டு
எளிதாகப் பறக்கிறான் விறகு வெட்டி ,
கடத்திப் போனவன் சூன்யக் காரனென்று
எதிரில் வந்த நாகமொன்றுச் சொல்லிவிட்டு மறைகிறது ,
ஏழு கடல்கள் தாண்டியும்
எளிதில் கிடைக்காத இளவரசியை
மரத்தை வெட்டி உருவாக்கி ,உயிரை கொடுக்கிறான் ,
மன்னருக்கு மகள் கிடைத்த மகிழ்ச்சியில்
ஏழைகளுக்கு இலவச நல் விருந்து ,
வரிசையில் பசியோடு காத்திருக்கிறாள்
உண்மையான இளவரசி !
அன்னதானம் வழங்குவது மரவெட்டியும், மர இளவரசியும்!
.
அன்னிய நாட்டிலிருந்து
இறக்குமதி
அரிசியும் பருப்பும்,
கான்கிரிட் பயிர்கள்
வரிசையில் காத்துக் கிடக்கின்றன.
.
இரண்டும் வெவ்வேறு கவிதைகளல்ல ;
எங்கோ ஒரு முடிச்சி
இழுத்துப் பிடிக்கிறது இரண்டையும் !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment