Wednesday, 2 August 2017

நான் இரசித்த கவிதைகள் - 12

 தீர்மானித்தபடியே

Image may contain: 1 person, closeup

தீர்மானித்தபடியே
மழை துவங்கு முன்
அடுக்ககம் வந்துவிட்டாள்.
பொத்தான் அழுத்தி
மின் தூக்கி மேல் நகர்கையில்
ஆட்டோ விலகிச் செல்வதை
கேட்டாள்/பார்த்தாள்.
உப்பரிகைக் கொடியில்
உலர்ந்த ஆடைகளைச் சேகரிக்கையில்
பெரும் துளியிட்டு மழை துவங்கியது.
அவள் செல்லத் தொட்டியில்
பூத்திருந்தது வெண் சங்கு புஷ்பம்.
படுக்கையறையில் குவித்து
ஆடைகளை மடிக்கையில்
ஆளுயரக கண்ணாடி அழைப்பது போல
அந்தரங்கப் பெயரின் உச்சரிப்பு.
முற்றிலும் அகற்றிக் கொள்ளச் சொன்ன
இடவலக் குரலை விரும்பினாள்.
கீழ்ப்படிந்துகொண்டே வந்தவளின் காலடியில்
கழன்றுவிழுந்திருந்தன உள்ளாடைகள்.
கருப்புக் காப்பியா, பச்சைத் தேனீரா
என்பதைத் தீர்மானித்தாள்
மார்புக் காம்புகளில் ஒன்றைத் தொட்டு.
கொதிக்கிற பாத்திரத்தை அகற்றி
சுனையெனப் பொங்கும்
ஜ்வாலையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
.பழைய பாடல் ஒன்றைப்
பாடிச் சுழலும் போதும்
நீல வட்டத்தின் தடாகத்தில் குதிக்கும்
முன் தீர்மானத்தை எடுக்கவே இல்லை.
நிகழ்வது அனைத்தின் அசாதாரணம் உணர்ந்து
தனிமையின் பதற்றத்துடன் காத்திருந்த
பீங்கான் கோப்பையில்
மின்னலிட்டு நிரம்பத் துவங்கியது
அவள் மேல் பற்றிப் பெய்த
அந்தி மழை.
.
 கவிஞர் கல்யாண்ஜி

No comments:

Post a Comment

Popular Posts