
யாருமில்லாத இரவென்று
அதைச் சொல்லமுடியாது...
என்னோடு நீயிருக்கிறாய்,
உன் விரல்களில்
ஒட்டியிருக்கும் மகரந்தத் துகள்கள்
என்னை
கவிதையெழுதப் பணிக்கின்றன,
பார்வையோரத்தில் ஒட்டியிருக்கும் அன்பு
என்னைத் தடவி கொடுக்கிறது,
போன்சாய் மரத்துப் புத்தன்
எதற்காகவோ
நம்மைப் பார்த்துச் சிரிக்கிறான்,
சன்னலைத் திறந்து வைக்கிறேன்,
காற்று என் மீது படர்ந்து போகிறது...
கண்களை மூடிக் கொள்கிறேன்,
என்னைக் கோப்பையிலூற்றி அருந்துகிறாய்,
விளக்கை அணைக்கிறேன்
பகலுக்கென்னை அழைத்துச் செல்கிறாய்,
பகல் நம்மை அருந்துகிறது...
இப்போது நீ யாரோ , நான் யாரோ
ஒருவரையொருவர்
விசாரிக்காமல் கடந்து போகிறோம்..
யாருமில்லாத போதிமரம்
நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment